சென்னை: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி துரத்தியடிக்கப்படுவார் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் புகழேந்தி நேற்று சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடிக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், எடப்பாடியோ எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வேன். எதையும் விடமுடியாது என்று அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். இவர் இருக்கும் அதிமுகவில் வேறு யாரும் இருக்க முடியாது. சிறைக்கு செல்லும் போது ஒரு நல்ல மனிதர் என்ற அடிப்படையில் ஆட்சி, அதிகாரத்தை எடப்பாடி கையில் கொடுத்தார் சசிகலா. ஆனால், அவருக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஆட்சி கைவிட்டு போகும் போது அதை தக்கவைத்தவர் ஓபிஎஸ்.
அப்போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம் வேண்டும் என்று நினைத்துவிட்டு இப்போது ஒரு மிகப்பெரிய காழ்ப்புணர்ச்சியுடன் அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். கட்சிக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர் செல்வத்தை தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறார்கள். 4 வருடமாக அதிகாரத்தில் இருந்தவர்களை கொள்ளையடிக்க அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி. ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் அவர் வீட்டின் முன் நின்றுகொண்டு வாழ்க, வாழ்க என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இரட்டை இலை என்ற சின்னம் இல்லாமல் தனியாக நின்றால் எடப்பாடி பழனிசாமியால் 500 ஓட்டுக்கூட வாங்க முடியாது.
எடப்பாடியின் செயல்பாட்டால் தமிழகத்தில் எதிர்கட்சி செயல்படவில்லை என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலையே சொல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. தொண்டர்கள் வருத்தத்துடன் தலைமை கழகத்தில் இருந்து வெளியே வருகிறார்கள். அதிமுகவை விட்டு எடப்பாடி தான் வெளியே போக வேண்டுமே தவிர ஓபிஎஸ் வெளியே போக முடியாது. எடப்பாடி கட்சியில் இருந்து வெளியே செல்வார். எடப்பாடியை முதல்வராக ஆட்சி கட்டில்லில் அமர வைத்தது தான் சசிகலா செய்த மிகப்பெரிய தவறு. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்த முடியாது. இனிமேல் என்ன நடக்கும் என்பதை ஓ.பன்னீர் செல்வமே முடிவு செய்வார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி துரத்தியடிக்கப்படுவார். இன்னும் இரண்டு நாட்கள் தான் பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு கூறினார்.