×

குவைத்தில் அடிமை வேலைக்கு இளம்பெண்கள் கடத்தல்: கேரளாவில் வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலைக்கு இளம்பெண்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கேரளாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குவைத் உள்பட வளைகுடா நாடுகளில் உள்ள அரபிகளின் வீடுகளில் குழந்தைகளை பராமரிக்க என்று கூறி கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம்பெண்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாதம் ₹60,000 சம்பளம், இலவச விசா, இலவச டிக்கெட் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து கொச்சியில் உள்ள ஒரு நிறுவனம் இவர்களை வேலைக்காக அழைத்து சென்றது.

இப்படி அழைத்து செல்லப்பட்டவர்கள் அரபிகளின் வீடுகளில் அடிமை வேலைக்கு பயன்படுத்தப்பட்டனர். தினமும் ஒரு வேளை உணவு மட்டும் கொடுத்து 18 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். இதற்கு மறுப்பவர்களை ஏஜெண்டுகள் ஒரு அறையில் பூட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிலரை ஐஎஸ் தீவிரவாதிகளுக்காக சிரியாவுக்கு கடத்தியதாகவும் கூறப்படுகிறது. அரபிகளின் வீட்டில் உள்ள பெண்களும் இவர்களை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்தியாவிலிருந்து இளம்பெண்களை கொண்டு செல்வதற்கு ஏஜெண்டுகளுக்கு அரபிகள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு கொடுமைகளை அனுபவித்து குவைத்தில் உள்ள ஏஜெண்டுகளின் பிடியிலிருந்து தப்பிவந்த கேரளாவை சேர்ந்த 3 இளம்பெண்கள் மூலம் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதில் கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்கள் சிரியாவுக்கும் கடத்தப்பட்டதாக கூறப்படுவதால் இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில் இளம்பெண்கள் கடத்தலில் முக்கிய தலைவனாக செயல்பட்டு வந்தது கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மஜீத் என்ற கசாலி என்பது தெரியவந்தது.

அவருக்கு உடந்தையாக பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த அஜுமோன் (35) செயல்பட்டு வந்துள்ளார். அவர்கள் 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அஜுமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தான். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நேற்று அஜுமோன் எர்ணாகுளம் போலீசில் சரணடைந்தான். போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kuwait ,Kerala , Kidnapping of slave girls in Kuwait: Youth arrested in Kerala
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...