×

திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறி சேலம் காதலன் வீட்டு முன் சென்னை இளம்பெண் தர்ணா

சேலம்: சேலம் அருகே, திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக கூறி காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஊமகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் புகழரசன். சென்னை போரூரில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று சென்னையை சேர்ந்த ஹேமப்பிரியா என்ற இளம்பெண், புகழரசன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் என்னை பிரிந்து சென்று விட்டதால், பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் விவாகரத்து கிடைக்கவுள்ளது. சென்னைக்கு வேலைக்கு வந்த புகழரசன், எங்கள் வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும், எனது மகனை தனது சொந்த மகனை போல் பார்த்து கொள்வதாகவும் உறுதியளித்தார். பின்னர், எங்கள் வீட்டிலேயே கணவன், மனைவி போல் ஒன்றாக வசித்து வந்தோம்.

இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு, புகழரசன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுகுறித்து சென்னை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். இந்நிலையில், புகழரசன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். அவரை தேடி வந்த போது, அவரது குடும்பத்தினர் என்னை விரட்டி விட்டனர். புகழரசன் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கும் வரை, இங்கிருந்து செல்லமாட்டேன். இவ்வாறு கூறினார். இதை கண்ட புகழரசன் குடும்பத்தினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்போவதாக கூறி, அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி  போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை போலீஸ் ஸ்டேஷனில், தன்னையே திருமணம் செய்து கொள்வதாக, புகழரசன் எழுதி கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை போலீசாரிடம் காண்பித்த ஹேமப்பிரியா, அவருடன் சேர்த்து வைக்கும்படி முறையிட்டார். பின்னர், அங்கு வந்த புகழரசன், ஹேமப்பிரியாவிடம் சமரசமாக செல்வதாக கூறினார். அதற்கு ஹேமப்பிரியாவும் ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன் எனக்கூறி, ஹேமப்பிரியா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Tags : Chennai ,dharna ,Salem , Chennai girl Tarna in front of Salem boyfriend's house claiming that she cheated by showing desire for marriage
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!