கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்தும் வார விடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலாப்பயணிகளின் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது.
வார விடுமுறை காரணமாக நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை இல்லை. இருப்பினும் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, பேரி பால்ஸ் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் கொட்டுகிறது.
இதனை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர். மேலும் குணா குகை, பில்லர் ராக், மோயர் பாயிண்ட், பைன்ஸ் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.