கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாத பெய்த கனமழையால் 28 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று ஆய்வு செய்தார்.
தற்போது மழை குறைந்துள்ள போதிலும், மக்களின் துயரம் மட்டும் தீரவில்லை. வீடுகளில் புகுழந்த வெள்ளத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, முதல்வர் ஹிமந்தாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்சா சர்மாவை அழைத்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். ஒன்றிய அரசின் அனைத்து ஆதரவையும் உறுதி செய்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.