×

மன்னார்குடி- மயிலாடுதுறை இடையே 20ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை

*தெற்கு ரயில்வே அறிவிப்பு பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி : கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மன்னார்குடி-மயிலாடுதுறை இடையேயான ரயில்சேவை வரும் 20ம் தேதி முதல் சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, ஜோத்பூர், திருப்பதி, மானாமதுரை, மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 2020 மார்ச் 23ம் தேதி முதல்நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மன்னார்குடியில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படவில்லை.

நோய் தொற்று தாக்கம் குறைந்த பிறகு இந்தியா முழுவதும் படிப்படியாக ரயில் சேவை துவக்கப்பட்டது. இதையடுத்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயில், திருப்பதி பாமினிவிரைவு ரயில், கோவை செம்மொழி விரைவு ரயில், ஜோத்பூர் பகல் கீ கோத்தி விரைவு ரயில் சேவைகள் மீண்டும் மன்னார்குடியில் இருந்து துவக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மன்னார்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை பயணிகள் ரயில் வண்டி எண் 56034 மற்றும் காலை 6.30 மணிக்கு புறப்படும் மானாமதுரை பயணிகள் ரயில் வண்டி எண் 76805 இயக்கப்படாமல் இருந்தது.
ரயில் பயணிகள் இந்த ரயில்களின் சேவைகளை தொடங்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழும் தொடர் செய்திகளை வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில், வரும் 20ம்தேதி முதல் மன்னார்குடி - மயிலாடுதுறை இடையே மீண்டும் ரயில் சேவை துவங்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.

வண்டி எண் 06404 என்ற பெயரில் சிறப்பு விரைவு ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் காலை 08.30க்கு மன்னார்குடியில் புறப்பட்டு காலை 10.40க்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு இரவு 06.55க்கு மன்னார்குடி வந்தடையும்.

வழக்கம்போல வழியில் எல்லா ஊர்களிலும் நின்று செல்லும். கட்டணம் விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான உத்தரவை தெற்கு ரயில்வேயின் பயணிகள் பிரிவு துணை இயக்க மேலாளர் கனேஷ் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு மன்னார்குடி- மானாமதுரை பயணிகள் ரயிலையும் வழக்கம்போல இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Mannargudi ,Mayiladududdhara , Mannargudi, Mayiladuthurai, Passenger train, Southern Railway
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...