×

பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஒரு வருடத்தில் யானைகளால் மனித உயிரிழப்பு ஏற்படவில்லை

*வனத்துறை சாதனை - பொதுமக்கள் பாராட்டு

வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில்  வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப்  ஆகிய 4 வனச்சரகங்கள்  உள்ளன. பொள்ளாச்சி வன கோட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்  சுற்றித்திரியும் 500க்கும் மேற்பட்ட யானைகளால் மனித உயிர்கள் இழப்பு  ஏற்பட்டு வந்தது. கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்த ஆராய்ச்சிகள்  அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை  காரணமாக கடந்த ஆண்டில் யானைகளால்  மனித உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.  

பொள்ளாச்சி  வனக்கோட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் மனித-விலங்கு மோதலில் 49 பேர்  கொல்லப்பட்டதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள்  தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் வால்பாறை நகராட்சிக்கு  உட்பட்ட 217 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள தேயிலை மற்றும் காபி  தோட்டங்கள் தொழிலாளர்கள் ஆவர்.

அதேபோல், 2012 -2022 க்கு இடையிலான 10  ஆண்டுகளில் 75 யானைகளும் இறந்துள்ளதாக பதிவுகள் கூறுகிறது.  இந்நிலையில்  யானைத் தாக்குதலில் கடைசியாக வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டை சேர்ந்த  இரவு காவல் கடந்த ஜூன் 4, 2021 காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிர்  இழந்தார். அதன்பின் பொள்ளாச்சி கோட்டத்தில் முடிவுற்ற, ஜூன் 4, 2022 முடிய  12 மாதங்களில் காட்டு யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்படவில்லை.  

இதற்கு தங்கள் உயிரை பணயம் வைத்து, முழு உழைப்பையும் வழங்கி யானைகளை  குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்து விரட்டி, இரவு பகலாக  உழைத்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கும், அவர்களை வழிநடத்திய  வனவர்களுக்கும், இரவு நேர புகார்களை ஏற்று உரிய உத்தரவு வழங்கிய வால்பாறை  மற்றும் மானாம்பள்ளி வனச்சரகராக பணியாற்றி வரும்  மணிகண்டனுக்கும், உதவி வன  பாதுகாவலர் செல்வத்திற்கும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர்  கணேசனுக்கும் வால்பாறை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நன்றி  தெரிவித்து உள்ளனர்.

தங்கள் ஆராய்ச்சியால் மனித உயிர் இழப்புகளை  தடுத்து, தகவல் அளித்து முன் எச்சரிக்கை செய்து மக்களை விழிப்புணா்வு அடைய  செய்த என்.சி.எப். தன்னார்வ நிறுவனத்திற்கும், அதில் யானைகள் குறித்து  ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ஆனந்த், ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுநாதன்  ஆகியோருக்கும், யானைகளை கண்டறிந்து தகவல் அளிக்கும் ஊழியர்களுக்கும்  பொதுமக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags : Pollachi forest , Valparai, Elephant, Forest Elephant
× RELATED காட்டு முயல் வேட்டையாடிய 10 பேர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்