லண்டன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, தனது விக்கிலீக்ஸ் இணையதள பத்திரிகையின் மூலம் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு, ஸ்வீடனில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில் இருந்து தப்புவதற்காக, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் 7 ஆண்டுகளாக தஞ்சமடைந்து இருந்தார்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் காணொலி மூலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கான ஒப்புதலைப் பெற பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு ஆவணங்களை அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், `நீதிமன்ற உத்தரவுபடி அசாஞ்சேவை நாடு கடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியிட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அசாஞ்சே மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.