சென்னை: கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் பதவியில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் விலகிக்கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி கூறினார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்தவர்கள். இப்போது இருவரும் சண்டைபோட்டு கொள்கின்றனர். இப்படி சண்டைபோட்டுதான், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் வேலுமணி இருக்கும் வார்டுகளிலேகூட திமுக வென்றது. அதிமுக இப்போது ஜாதி கட்சியாக மாறி வருகிறது. இவர்கள் நன்றி மறந்தவர்கள்.
ஜெயலலிதா இருந்தால் இப்படி ஆகியிருக்குமா?. ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருமே ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் இருந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரை கேவலமாக பேசலாமா?. அதிமுக அலுவலகம் முன்பு கோஷ்டியாக உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டு வருகின்றனர். சண்டை போட்டுகொண்டு கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். இதை தவிர்க்க
வேண்டும். இவ்வாறு ஆறுக்குட்டி தெரிவித்தார்.