திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள நெல்லிவனத்தேவி எனப்படும் வேண்டவராசி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. கடந்த 14ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து மறுநாள் 15ம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜை, கும்ப உற்சவம் போன்றவை நடைபெற்றது. 16ம் தேதி இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. நேற்று 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால பூஜையுடன் தொடங்கிய விழாவில் முதற்கட்டமாக விநாயகர், துர்க்கை, நவகிரகம் ஆகிய சன்னதிகளுக்கும், இதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு மூலவரான வேண்டவராசி அம்மன் சன்னதியில் அமைந்துள்ள விமானத்திற்கும், உற்சவருக்கும் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத குடமுழுக்கு நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். குடமுழுக்கு ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தில் குன்றின்மீது அமைந்துள்ள, கிபி1097ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு ராஜராஜ சோழனால் பராமரிக்கப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் சீரமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நேற்று காலை 10 மணி அளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றிநடைபெற்றது. இதேபோன்று, கருங்குழி பேரூராட்சி ஞானகிரீஸ்வரன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மதுராந்தகம், அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ காத்தவராயன் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்புடன் நடைபெற்றது.