×

அக்னி பாதை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற்படை, விமான படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பாஜ அரசின் அமைச்சரவை, ஜூன் 14ம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்திய படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதிய செலவுகளை தடுப்பதுதான் என்று, ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது, நியாயமற்ற தேர்வு முறை.

நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்திய படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர்.  இந்நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்திய படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.

அதுமட்டும் அல்ல, ஒன்றிய பாஜ அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கிறது. இந்திய ராணுவத்தை காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்எஸ்எஸ் கொள்கையை  செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே ‘அக்னி பாதை’ என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கிறது.

அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12ம் வகுப்பு தேர்வுச் சான்றிதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம். இந்த திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒன்றிய பாஜ அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.  எனவே, ‘அக்னி பாதை’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Agni ,Vaiko , Agni Path project should be withdrawn: Vaiko urges govt
× RELATED அக்னி நட்சத்திர காலம் துவங்கும்...