மதுராந்தகம்: மதுராந்தகம் ஸ்ரீ சந்தோஷி கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 50 மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பையம் பாடியில் ஸ்ரீ சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தனியார் வங்கி ஒன்றிற்காக அதன் அதிகாரிகள் கல்லூரி மாணவர்களிடையே நேர்காணல் நடத்தினர். வங்கியின் மனிதவள மேலாளர் ராஜேஷ் குமார் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, வங்கியின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி தாளாளர் கே.காயத்ரிதேவி, மேலாளர் குருநாதன், கல்லூரி முதல்வர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில், தனியார் வங்கி பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.