கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே தோக்கமூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 15ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து
புதன்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பிரார்த்தனை, புன்யாஹவாசனம், மஹாசங்கல்பம், க்ரஹபிரீதி, மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜை, பிரவேசபலி, மிருத்சங்கிஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தணம், கும்பலங்காரம், பாலாயத்தில் கலாகர்ஷனம் கும்பங்கள், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, வேதிகார்சனை, விசேஷ ஹோமம், பூர்ணாஹூதி, வேத உபசாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று நான்காம் கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, ஹோமம், மஹா பூர்ணாஹூதி, வேவேத உபசாரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் யாத்ராதானம், யாகசாலையில் இருந்து கலசங்கள் ஆலயத்தை வலம் வந்தது. தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க திரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீர்த்தபிரசாத விநியோகம், அலங்காரம், மாங்கல்ய தாரணம், அன்னதானம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பெரியவர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீதிருவரங்க செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கன்னிகைபேர் சுரேஷ் சிவாச்சாரியர் தலைமையில் கொண்ட 17க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் கலந்துகொண்டு காலை மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகளை நடத்தினர். தொடர்ந்து 16ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடைசி நாளான நேற்று வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கலச புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து காலை 9.15 மணியளவில் யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு ஆலயத்தின் மீதுள்ள கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதனையடுத்து திருவரங்க செல்லியம்மன், செல்லியம்மன், எல்லையமமன், கன்னிமார்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு செல்லி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் 108 குங்குமார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்த பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் விழாக்குழுவினர் மற்றும் கன்னிகைபேர் கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.