புழல்: செங்குன்றம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், 2022-2023ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன், வழக்கறிஞர் திராவிட டில்லி, ஊராட்சி துணைத் தலைவர் அனுசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து, வடகரை, மாதவரம் நெடுஞ்சாலை, ஸ்டார் சிட்டி நகர், அம்பேத்கர் தெரு, பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு வழியாக ஊர்வலமாகச் சென்று, வடகரை ஊராட்சி அலுவலகம் முன்பு பேரணியை நிறைவு செய்தனர். இதில், மாணவர்கள் இந்த பள்ளியில் அரசு சார்பில், பல்வேறு நலத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த பேரணியில் புழல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.