பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (56). நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இளமாறன் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இளமாறன், கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்க நிறுவன தலைவராக இருந்து வந்தார்.
தமிழ்நாடு தமிழ் சங்கத்தை நடத்தி வந்தார். 2016 முதல் 2019ம் ஆண்டுவரை ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஜாக்டோஎன்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதில் 18 அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய பென்ஷன் திட்டத்தற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர். கொடுங்கையூரில் இவர் பணிபுரிந்த அரசு பள்ளியில் 2016-19 வரை தனது சொந்த செலவில் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார். இளமாறன் மறைவிற்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.