தூத்துக்குடி: மாணவனிடம் ஜாதி ரீதியாக பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை, கணினி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம். குளத்தூரில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு குளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 725 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் தொடர்பாக கணினி ஆசிரியை மீனா உதவியுடன், பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, ஒரு மாணவனிடம் ஜாதி ரீதியாக செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை முன்னிட்டு பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், ஆசிரியை, மாணவனிடம் ஜாதியை குறிப்பிட்டு பேசிய ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை அடிப்படையில் ஆசிரியைகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.