விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில், ஒருங்கிணைந்த நகர்ப்புற குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் வீடூர் முதல் விக்கிரவாண்டி வரை 9 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதேபகுதியில், 15-வது நிதிக்குழு மூலம், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதுகுளம் தூர்வாருதல் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, கே.கே.நகர் பகுதியில், பொதுசுகாதார நவீன கழிப்பறை வளாகம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கால்நடைகிளை மருந்தகத்தை பார்வையிட்டு, கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதை பார்வையிட்டு கால்நடை வளர்ப்போருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி, கால்நடை வளர்ப்பிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என கால்நடை மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து, விக்கிரவாண்டி வட்டம், சின்னதச்சூர் ஊராட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1.20 ஹெக்டேர் விளைநிலத்தில் ரூ.37,072 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதையும், மானிய திட்டத்தில், 0.80 ஹெக்டேர் விளைநிலத்தில் தனிநபர் விவசாயி ஊடுபயிர் பயிரிடப்பட்டுள்ளதை ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், துணை இயக்குநர் பெரியசாமி, விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, அதிகாரிகள் உடனிருந்தனர்.