சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பருவமழை காலத்திற்கு முன்னதாகவே நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, வண்டல்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
30 நீர்வழிக் கால்வாய்களில் கடந்த 15 நாட்களில் 4 ரொபோடிக் எஸ்கவேட்டர் இயந்திரங்களை பயன்படுத்தி கொடுங்கையூர் கால்வாய் (வடக்கு), விருகம்பாக்கம் கால்வாய், வடக்கு அவென்யூ கால்வாய், பாடிக்குப்பம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளிலும், அடையாறு ஆறு, கூவம் ஆறு மற்றும் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் 9,113 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நீர்வழித்தடங்கள் சுத்தம் செய்யப்பட்டு 430.61 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், அடுத்த 15 நாட்களில் கொடுங்கையூர் கால்வாய் (தெற்கு), டி.வி.எஸ். கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய் மற்றும் ஏகாங்கிபுரம் கால்வாய் ஆகியவற்றிலும், எண்ணூர் குளம், வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய், தரமணி ஏரி, கொடுங்கையூர் இணைப்பு கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகியவற்றிலும், அடையாறு ஆறு மற்றும் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.