×

திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கை பட்டா பெற்று ஆக்கிரமிப்பு உடனே ரத்து செய்ய வேண்டும்: நிர்வாகம் வலியுறுத்தல்

திருமயம்:திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கை தனிநபர்கள் பட்டா பெற்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனே ரத்து செய்ய வேண்டுமென ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 1965ஆம் ஆண்டு முதல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தனி நபர்கள் சிலர் குப்பை கிடங்கை சுத்தம் செய்து சுமார் 19 ஏர்ஸ் நிலத்தை முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் மற்றும் உறுப்பினர்கள் குப்பை கிடங்கை ஆக்கிரமிப்பு செய்தவர்களை தடுத்து நிறுத்தியாதக தெரிகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் 20 வருடங்களுக்கு முன்னரே இந்த இடத்தை பட்டா செய்துள்ளதாகவும் இதனால் தற்போது இந்த இடம் எங்களுக்கு சொந்தம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சித் தலைவர் மாவட்ட கோட்டாட்சியர், திருமயம் வட்டாட்சியருக்கு மனு அளித்தனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி சார்பில் மனு கொடுத்து பல நாட்களாகியும் விரைந்து விசாரணை செய்து முறையான அறிக்கை ஊராட்சி நிர்வாகத்திடம் இதுவரை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கை மீட்டுத்தரக் கோரி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் திருமயத்தில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் பெரும் இன்னல்களை ஊராட்சி நிர்வாகம் சந்திக்கக்கூடும் என ஊராட்சி நிர்வாகம் அச்சம் தெரிவித்துள்ளது.

Tags : Thirumayam panchayat , Thirumayam Panchayat, Owned Garbage Depot, Occupying Patta`
× RELATED திருமயம் ஊராட்சியில் கடைகள், வணிக வளாகம் ₹4.57 லட்சத்திற்கு ஏலம்