கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உயர்மட்ட நடைபாலம் இருந்தும், தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கல்லூரி மாணவிகள் கடந்து செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிரியில், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள இந்த கல்லூரிக்கு, மாணவிகள் வந்து செல்லும் போது, அபாயகரமான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதை தவிர்க்க, கடந்தாண்டில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடைபாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நடைபாலத்தை மாணவிகள் பயன்படுத்துவதில்லை. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் தேசியநெடுஞ்சாலையை, அபாயகரமான முறையில் கடந்து செல்கின்றனர்.
ஒருசில பேராசிரியர்களும் கூட, நடைபாலத்தை உபயோகிக்காமல், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம், போலீசார் தலையிட்டு, மாணவிகள் சாலையை கடப்பதை தவிர்த்து, நடைபாலத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.