×

ஷாப்பிங் போறீங்களா... இதை கவனியுங்க!

நன்றி குங்குமம் தோழி

வரிசைகட்டி நிற்கும் பண்டிகைக் காலங்களில் கொரோனாவால் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்து வந்தோம். தற்போது சில தளர்வுகளும் ஏற்பட்ட நிலையில் நமக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டும். அப்படிப் போகும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…

*ஷாப்பிங் செல்லும் முன், என்னென்ன  பொருள் தேவை என்று பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். எது  உடனடியாகத் தேவையோ அது மட்டுமே பட்டியல் போடும்போது ஞாபகத்துக்கு வரும். அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

*என்னென்ன வாங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அதற்குத் தேவையான அளவு பணத்தை தோராயமாக மதிப்பிட்டு கையில் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில் கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என்று பொருட்களை வாங்கிக் குவித்துவிட்டு பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்வோம்.

*உங்கள் லிஸ்டில் இல்லாத ஒரு பொருளைப் பார்த்தவுடன் வாங்கி விடாதீர்கள். ‘இது கண்டிப்பாக நமக்குத் தேவையா?’ என மனதுக்குள் பலமுறை கேட்டுப் பார்த்துக்கொண்டு, தேவைப்பட்டால் மட்டுமே வாங்குவது நல்லது.

*‘இது வாங்கினால் அது இலவசம்; அது வாங்கினால் இது இலவசம்’ என சலுகை விளம்பரங்கள் அடிக்கடி போடப்படும். ‘முந்துங்கள், இந்த ஆஃபர் இன்னும் சில நாட்கள் மட்டுமே’ என்பார்கள். உங்களுக்குத் தேவையான பொருள் இருந்தால் மட்டுமே சலுகையைபயன்படுத்திக் கொள்ளுங்கள். சலுகைகள் அடிக்கடி வரும். அவசரப்பட வேண்டாம்.

*50% தள்ளுபடி, 75% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். அவ்வளவு தள்ளுபடியை ஏதாவது சில பொருட்களுக்கு மட்டுமே தருவார்கள். அவை அநேகமாக நீண்டநாட்களாக விற்காத பொருட்களாக இருக்கக்கூடும். அல்லது ஏதாவது குறைபாடுள்ள பொருட்களாக இருக்கும். கடைக்கு வருபவர்கள் வெறுங்கையோடு திரும்பாமல், வேறு ஏதாவது வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் இப்படி அறிவிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

*தரமற்ற பொருளை குறைந்த விலைக்கு வாங்குவதைவிட, தரமான பொருளை சற்று அதிக விலை கொடுத்து வாங்குவது தவறில்லை. ஒவ்வொரு முறை ஷாப்பிங் செல்லும்போதும் இந்தத் தீர்மானத்தை மனதில் வைத்துக்கொள்வது அவசியம்.

*சலுகை விற்பனைகளில் இதுவரை நீங்கள் தேவையான பொருட்களைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள்? அதனால் ஏற்பட்ட நஷ்டம் என்ன? என்பதை நிதானமாக யோசித்துப் பாருங்கள். அதன்பின் அப்படி ஷாப்பிங் செல்ல மாட்டீர்கள்.

*பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகும்போது, ‘இங்கே போய் வெறும் நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் என்ன நினைப்பார்கள்... பார்த்துவிட்டு வாங்காமல் போவதா? என யோசித்து, தேவையில்லாத பொருட்களை வாங்கி விடும் ஆபத்து இருக்கிறது. அவசரத் தேவைக்கான பொருட்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சாதாரண மளிகைக்கடையில் வாங்குங்கள். அங்குதான் தள்ளுபடி, விலை குறைப்பு, சலுகை என தூண்டில்கள் போட மாட்டார்கள். சலுகை தருகிறார்கள் என்பதற்காக தேவையில்லாத பொருளை வாங்க வேண்டிய எந்த நிர்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.

தொகுப்பு: இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!