துபாய்: ஈரானின் தெற்கு கீஷ் தீவில் நேற்று அடுத்தடுத்து 7 முறை நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவில் 6 ரிக்டர் என்ற அளவில் 4 அதிர்வுகளும், 5.3 ரிக்டர் புள்ளியில் ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சேத விவரங்கள் உயிரிழப்புக்கள் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள பொதுமக்களும் நிலஅதிர்வை உணர்ந்ததாக ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்தாரிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாக பதிவானதாக கத்தார் நிலநடுக்க தகவல் மையம் கூறியுள்ளது.