விழுப்புரம்: விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடு புகார் எதிரொலியாக விஜிலென்ஸ் எஸ்பி ஜெயலட்சுமி தலைமையில் சோதனை நடத்தினர். விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. குறிப்பாக, ஆவின் மார்க்கெட்டிங்கில் உற்பத்தியாகும் நெய், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் பலலட்சம் மோசடி நடந்ததாகவும், விற்பனை பிரிவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்ள அதிகாரி ஒருவர் மீது பல கோடி ஊழல் புகாரும் கூறப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகக்குழு மீதும் அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், நேற்று சென்னை ஆவின் விஜிலென்ஸ் பிரிவு எஸ்பி ஜெயலட்சுமி தலைமையில் டிஎஸ்பி சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10 மணிமுதல் ஆவின் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். விற்பனை பிரிவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தமைக்கான ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினர். அதேபோல், கணக்குப்பிரிவிலும் பலமணிநேரம் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பலமணி நேர சோதனையில் ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விற்பனை பிரிவு அதிகாரி, பொதுமேலாளர், கணக்குப்பரிவு அதிகாரிகளிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை பால்பூத்துகள் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. பால்பொருட்கள் விற்பனை எவ்வளவு என்பது குறித்து அதிகாரிகளிடம் துருவி, துருவி விசாரித்தனர்.