சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பாடகர் சித்து மூஸ்சேவாலா. இவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்றது. அதற்கு அடுத்த நாளான மே 29ம் தேதி காரில் சென்றபோது மூஸ்சேவாலா சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலை சம்பவத்தில் டெல்லி சிறையில் அடைகக்ப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரை கைது செய்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் பஞ்சாப் போலீசார் அனுமதி கோரினார்கள். நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பலத்த பாதுகாப்புடன் பிஷ்னோய் பஞ்சாப் அழைத்து செல்லப்பட்டார். மான்சா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. டெல்லியில் இருந்து மான்சா மற்றும் மான்சாவில் இருந்து காரார் பகுதிக்கு பிஷ்னோய் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.