நாட்டிங்காம்: இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 533, இங்கிலாந்து 539ரன் எடுத்தன. 14 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4ம் நாள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 224ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 284 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 299 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், பேர்ஸ்டோ டி.20 போட்டி போல் அதிரடியாக ஆடினார்.
77 பந்தில் சதம் அடித்த அவர் 92 பந்தில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 136 ரன் எடுத்து ஆவுட் ஆனார். 50 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 299 ரன் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75ரன்னில் களத்தில் இருந்தார். பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார். ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் வென்றிருந்த இங்கிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் வரும் 23ம்தேதி தொடங்குகிறது.