சென்னை: ரத்தம் தேவைப்படுவோர் எளிதாக எங்களைத் தொடர்புகொள்ளும் பொருட்டு Kamals Blood Commune உருவாக்கியுள்ளோம். உதவிக்கு 9150208889 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எமது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்டு 40 ஆண்டுகளாகின்றன. எங்கள் நற்பணி நாயகர்கள் தொடர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் Kamals Blood Communeஉருவாக்கியுள்ளோம். தமிழில் கமல் குருதிக்கொடை குழு
இதன்மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் 9150208889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளர்களின் மூலம் ரத்தம் தேவைப்படுபவர்களுக்குத் துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களுக்கு இந்த எண்ணை அழைத்து தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
ரத்த தானம் செய்வதற்குரிய உடல் ஆரோக்யம் கொண்டவர்கள் இந்த அரும்பணியில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குருதிக்கொடையாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவைத் தொடங்கி ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி, இதனை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யத்தினரை மனதார பாராட்டுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.