கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை ஓரமாக தினந்தோறும் சென்னை, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் காய்கறிகள், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று வருகிறது.இந்நிலையில், அவ்வழியே நேற்று சென்ற லாரி டிரைவர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏரிக்கரை ஓரமாக இயற்கை உபாதைக்கு சென்றிருந்தார்.
அப்போது கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகவலை கூறிவிட்டு அவர் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு சுமார் 45 வயதுக்குட்பட்ட அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் அடித்து கொலை செய்யப்பட்டு நெடுஞ்சாலை ஓரமாக வீசப்பட்டாரா, அல்லது ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.