×

எழும்பூர் தொகுதியில் பெருந்திரள் தூர்வாரும் பணி; எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: எழும்பூர் தொகுதியில் பெருந்திரள் தூர்வாரும் பணியை இ.பரந்தாமன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். பருவ மழைக் காலங்களில் சென்னை பெருநகர தெருக்களில் வெள்ள நீர் தேங்கி, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதைத் தடுக்கும் நோக்கில், பருவ மழை காலத்திற்கு முன்பே சென்னை பெருநகரில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், இந்த தூர்வாரும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையிலும் தொய்வின்றியும் சென்னை மாநகரெங்கும் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ.பரந்தாமன், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 61வது வார்டில் அமைந்துள்ள தமிழ்ச் சாலையில் சென்னை பெருநகரக் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் துறை சார்பில் பெருந்திரள் தூர்வாரும் பணியைத் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், தூர்வாரும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஊர்திகள் மூலம் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதை ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் சுதர்சனம், 61வது பகுதிப் பொறியாளர் மகேஸ்வரி, சென்னை பெருநகர 61வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முசாபர், எழும்பூர் தெற்கு பகுதி திமுக அவைத் தலைவர் களரிமுத்து, பொருளாளர் கலையரசன், துணைச் செயலர் அன்னபூரணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி, 58வது வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 58 அ வட்டச் செயலாளர் மருது, 108வது வட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், 108வது வட்டத் துணை செயலாளர் சீனிவாசன், பகுதி பிரதிநிதி இளையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Egmore ,MLA , Mass evacuation work in Egmore constituency; MLA started
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!