×

பெண் சித்த மருத்துவர் கொலையில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பரோட்டா மாஸ்டர் கைது: காதல் திருமணம் செய்து சொந்த ஊரில் ‘பாஸ்ட் புட்’ நடத்தியது அம்பலம்

சென்னை: தி.நகரில் பெண் சித்த மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவான பரோட்டா மாஸ்டரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி (67). சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் வசித்து வந்தார். கடந்த 21.5.2002ல் வீட்டில் மர்மமான முறையில் மலர்கொடி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைதொடர்ந்து போலீசார் அப்போது அழகர்சாமி மற்றும் அவரது நண்பர் சக்திவேலை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ராமகிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் ராமகிருஷ்ணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையே ராமகிருஷ்ணன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியில் ‘பாஸ்ட் புட்’  நடத்தி வருவதாக தேனாம்பேட்டை உதவி கமிஷனர் பிரகாஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ராமகிருஷ்ணனை அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் ராமகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:
சித்த மருத்தவர் மலர்கொடி வீட்டில் ராமகிருஷ்ணனின் சகோதரர் அழகர்சாமி வேலை செய்து வந்தார். அப்போது அவரை பார்க்க மலர்கொடி வீட்டிற்கு ராமகிருஷ்ணன் சென்றுள்ளார். தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் மருத்துவர் தனியாக வசித்து வருவது தெரியவந்தது. அவரிடம் அதிகளவில் பணம் நடமாட்டம் இருந்ததை ராமகிருஷ்ணன் கவனித்துள்ளார். பிறகு தனது சகோதரர் அழகர்சாமி மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து திட்டமிட்டு சித்த மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

 இந்த வழக்கில் சகோதரர் அழகர்சாமி மற்றும் அவரது நண்பர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். ஆனால், பணத்துடன் ராமகிருஷ்ணன் மட்டும் கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டார். பிறகு கேரளாவில் உள்ள ஓட்டல்களில் வேலைக்கு சேர்ந்து ‘பரோட்டா மாஸ்டராக’ உருவாகியுள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார். ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்தாலும், தனது உறவினர்களுடன் தொடர்ப்பில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே அவரது உறவினர்கள், கொலை செய்து 20 ஆண்டுகள் ஆகிறது. அந்த வழக்கையை போலீசார் மூடிவிட்டு இருப்பார்கள். இனியும் நீ கேரளாவில் தலைமறைவாக வாழ வேண்டுமா, உனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வா என கூறியுள்ளனர். உறவினர்கள் கூறியதை நம்பி, ராமகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊராரான திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டிக்கு வந்துள்ளார்.

பிறகு கொல்லம்பட்டியிலேயே புதிதாக ‘பாஸ்ட் புட்’ உணவகம் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள அழகர்சாமியிடம், போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணை நடத்திய போது, போலீசாரிடம் தனது சகோதரர் சொந்த ஊரில் இருப்பதாக கூறியதால் ராமகிருஷ்ணன் மாட்டிக்கொண்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Tags : Dindigul Barota Master ,Siddha ,Bastput , Female paranoid doctor murdered, Dindigul Baroda master arrested, romantic marriage,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...