×

முசிறி அருகே 12ம் நூற்றாண்டு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு

தா.பேட்டை: திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் இருந்து வடமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் செல்லாண்டி அம்மன் கோயிலுக்கு அருகே சாலையின் வடபுறம் கி.பி. 12ம் நூற்றாண்டை சேர்ந்த தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இந்து சமய அறநிலையத் துறையில் திருச்சி மண்டல தொல்லியல் ஆலோசகராக பணியாற்றும் கணேசன் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாடு முழுமையும் சமண சமயம் பரவியிருந்தது. பசி என்று வருவோருக்கு உணவளித்தல், அச்சம் கொண்டு வருவோருக்கு அடைக்கலம் அளித்தல், நோய்களுக்கு மருத்துவம் செய்தல், அறியாமையில் உள்ளவர்களுக்கு அறிவு கல்வி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்ட சமண சமய சான்றோர்களே தீர்த்தங்கரர்கள். அத்தகைய தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றி சமண சமயக் கோட்பாடுகளை நாடு முழுவதும் பரப்பியுள்ளனர். அவ்வாறு தோன்றிய 24 தீர்த்தங்கரர்களின் ஒருவர் தான் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் ஆகும். தீர்த்தங்கரர்கள் நிர்வாண கோலத்தில் நின்ற நிலையில் அல்லது தியான கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுவார்கள்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தீர்த்தங்கரர் தியான கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. மூன்று உலகங்களுக்கும் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் தலைக்குமேல் மதி நலம் அளிக்கும் வளங்கொழு முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது. தீர்த்தங்கரர் சிற்பங்கள் அருகில் அவர்களில் பாதுகாவலர்களாக விளங்கிய இயக்கனும், இயக்கியும் இடம்பெற்றிருக்கும். இங்குள்ள தீர்த்தங்கரரின் வலதுபுறம் இயக்கனும், இடதுபுறம் இயக்கியும் புடைப்பு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கி.பி 3ம் நூற்றாண்டு முதல் கி.பி 17ம் நூற்றாண்டு வரை சமணம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டது. கிபி 1ம் நூற்றாண்டில் இளஞ்சேரலிரும் பொறை என்ற சேர மன்னனும், நத்தி என்ற பொன் வாணிகனும், நாகன், கீரன் கொற்றி போன்ற பொது மக்களும் சமண சான்றோர்களுக்கு மலைக்குகைகளில் உறைவிடத்தை அமைத்துக் கொடுத்துள்ளது தமிழ் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் கரூர், புகழிமலை, கழுகுமலை, பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், குளித்தலை, ஜவர்மலை, உண்டான்கல்பாறை போன்ற பல இடங்களில் சமணத்தின் வரலாற்று தடயங்கள் பரவி இருக்கின்றன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பத்தை நோக்கும்போது கி.பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Tirthankara ,Musiri , Musiri, 12th century Tirthankara sculpture,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு