கொடைக்கானல் : கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் காடை வேட்டையாடியவருக்கு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை எச்சரிக்கை விடுத்தது. வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை, கேளையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள், அரியவகை பறவையினங்கள் வாழ்கின்றன.
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில், காடையை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.அப்போது பள்ளங்கி கோம்பை பகுதியில் ரகுராமன் என்பவர் காடையை துப்பாக்கியால் வேட்டையாடுவதை கண்டனர். துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அப்பகுதியில் வேட்டை நடைபெறுகிறதா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.