×

செல்போன் எடுத்து செல்ல அனுமதி மறுப்பு!: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினார் மைத்ரேயன்..!!

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்போன் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைத்ரேயன் கலந்துக் கொள்ளாமல் வெளியேறினார். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளன. இதில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்க அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மைத்ரேயன் கூட்டத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 23ம் தேதி நடக்கும் கூட்டத்திற்கு செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர அதிமுக முடிவு செய்திருக்கிறது. தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்க புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு செயற்குழு, பொதுக்குழு  கூட்டத்தில்  பங்கேற்க அழைப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Maitreyan ,AIADMK , Cellphone, AIADMK Consultative Meeting, Maitreyan
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...