ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து என்கவுன்டரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 100 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவல்கள் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தந்த பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், கையெறி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.