ஆவடி: ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் 3 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள அம்மா திருமண மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த இடம் வழங்க அம்மா திருமண மண்டபம் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி மற்றும் அயப்பாக்கம் பகுதிகளில் ரூ35 கோடி மதிப்பீட்டில் அம்மா திருமண மண்டபம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி ஆவடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ரூ15 கோடி மதிப்பீட்டில் 29 ஆயிரத்து 497 சதுர அடி பரப்பளவில் அம்மா திருமண மண்டபம் கட்ட அரசு பணிகளை துவங்கி 2019ல் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாரானது.
மேலும், 3 மாடிகள் கொண்ட அம்மா திருமண மண்டபத்தில் 50 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 75 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில், நவீன சமையலறை வசதியுடன் 300 பேர் உணவருந்தும் இடம், 2வது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் 650 பேர் அமரும் வகையில் விழா மண்டபம், மணமகன், மணமகள் அறை ஆகியவை அமைந்துள்ளன.
3வது தளத்தில் விருந்தினர் தங்கும் அறை, தனித்தனி கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஓய்வறை மற்றும் சிறப்பு வசதிகளாக சூரியதகடு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக அம்மா திருமண மண்டபம் அமைந்துள்ளது.இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக டெண்டர் விடப்படும். ஆனால் டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால் பணிகள் முடிந்து 3 வருடங்கள் ஆகியும் அம்மா திருமண மண்டபம் திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் நியாயமான கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஒரு நாள் கட்டணமாக ரூ50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சியில் 2020ல் திறக்கப்பட்ட இந்த திருமண மண்டபம் கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க முடியாமல்போனது. எனவே சம்பந்தப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் திருமண மண்டபத்தை விரைந்து திறக்க ஆவணம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.