சென்னை: சென்னை அருகே செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழிவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ள கடத்தும் கால்வாய்கள் என ரூ165 கோடி செலவில் நடைபெற உள்ள மழைநீர் கால்வாய் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:தாம்பரம் மற்றும் வண்டலூர் பகுதியில் உள்ள மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இந்த ஓடைகள் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிடைக்கப்படும் ஏரிகளின் உபரிநீர் மற்றும் மழைநீர் வடிந்து மேற்கண்ட கால்வாய்கள் வழியாக பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.
மேற்கண்ட இரு ஓடைகளும் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது சுமார் 3000 கன அடிக்கு மேல் வெள்ள நீர் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் சென்று கலந்தது. மழைக்காலங்களில் இந்த பகுதியில் சுமார் 3 முதல் 5 அடி அளவில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.மழை காலங்களில் ஒவ்வொரு வருடமும் மக்கள் திப்புக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் மழைக்காலத்திலே முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த இடங்களை 29.11.2021 மற்றும் 01.12.2021 ஆகிய தேதிகளில் இரண்டு முறை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது ரூ165.35 கோடி மதிப்பில் இவ்விடத்தில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இப்பகுதிகள் வெள்ள பாதிப்பில் இருந்து தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.