செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியில் 12 அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. செங்கல்பட்டு எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ30 லட்சம் மதிப்பீட்டில் இந்த பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயலஷ்மி துரைபாபு, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நாகம்மாள் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக வரலஷ்மி மதுசூதனன் எம்எல்ஏ கலந்துக்கொண்டு, அப்பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகளை வழங்கினார்.
பின்னர், பள்ளி திறப்பு முதல் நாளான நேற்று மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். இவ்விழாவில், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ஆப்பூர். சந்தானம், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதுபோல கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெண்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இனிப்பு, நோட்டு புத்தகங்கள் கொடுத்து அவர் வரவேற்றார். இதில் நந்திவரம், கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தெய்வானைதருமன், சண்முகம், ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.