மும்பை: ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக ஒளிபரப்பு செய்ய 2 நிறுவனங்கள் ரூ44 ஆயிரம் கோடிக்கு உரிமம் பெற்றுள்ளன. ஐபிஎல் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்தற்கான ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இணையவழியில் நடக்கும் இந்த ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(டிஸ்னி ஹாட் ஸ்டார்), சோனி ஸ்போர்ட்ஸ், ஜி என்டர்டெயின்மென்ட், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 என பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்த 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு 410 ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்ய அடிப்படை விலையாக ரூ32.89ஆயிரம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இவை இந்தியாவில் தொலைகாட்சி ஒளிபரப்பு, இந்தியாவில் இணையவழி ஒளிபரப்பு, இணைய வழியாக பைனல் உட்பட 18 சிறப்பு ஆட்டங்கள் ஒளிபரப்பு, வெளிநாடுகளில் தொலைக்காட்சி, இணைய ஒளிபரப்பு என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
ஒளிபரப்பை கைப்பற்ற நிறுவனங்கள் போட்டி போட்டதால் இந்த 4 பிரிவுகளிலும் முதல் நாளே ரூ43,050 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டது. தொடர்ந்து 2வது நாளான நேற்று ஏலத்தொகை 50 ஆயிரம் கோடியை தாண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று மாலை வரை ரூ44,075 கோடியை தான் ஏலத் தொகை தொட்டுள்ளது.இந்நிலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரூ23,575கோடிக்கும்(முதலில் சோனி நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியானது), இணையவழி ஒளிபரப்பை ரிலையன்சின் வியாகாம் ரூ20,500 கோடிக்கும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 2 பிரிவுகளுக்கான ஏலம் நாளையும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த ஏலங்களும் முடிந்த பிறகு யார்,யார் ஒளிபரப்பு உரிமத்தை, எந்த தொகைக்கு பெற்றுள்ளனர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.