தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலுக்கு 12 அடி நீளம், 6.5 அடி உயரம் கொண்ட பள்ளி கொண்ட பெருமாள் சிலையுடன் ரதம் வந்தது. பெரியகோவிலுக்கு எதிரே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இந்த ரதம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த ரதத்துக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதனை பார்த்த கோயிலுக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் ரதத்தில் வந்த பெருமாளை வணங்கினர். மேலும் பெருமாள் சிலை முன்பு நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மாயோன் திரைப்பட குழு சார்பில் இந்த ரதம் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ரதம் கடந்த 5ம் தேதி சென்னையில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை இந்த ரதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயிலுக்கு செல்ல உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 1ம் தேதி முதல் இந்த ரதம் ஆந்திரா மாநிலத்திற்கு செல்கிறது. இதுகுறித்து பட தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் கூறுகையில், மாயோன் திரைப்படத்தின் முன்னோட்டமாக படத்தில் வரும் பள்ளிகொண்ட பெருமாள் சிலை ரதம் போல் அமைக்கப்பட்டு வலம் வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக சிபிராஜ், கதாநாயகியாக தான்யாரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகத்தில் ஆன்மிக அறிவியலை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் சுவாரசியமாக இருக்கும். இந்த படம் வருகிற 24ம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.