மொஹாலி: வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் அவதிப்பட்டு வந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மொஹாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் நிறுவனரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (94), இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மாத தொடக்கத்தில், அவருக்கு வயிற்றுப் பிரச்னை, ஆஸ்துமா பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டு வந்த அவர், மொஹாலியில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரானதால், அவர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரகாஷ் சிங் பாதல் உடல் நலம் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிரோமணி அகாலி தளம் கட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரைப்பை மற்றும் ஆஸ்துமா பிரச்னையின் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை இயல்பாக இருக்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.