×

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

சென்னை : சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே ராஜசேகரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தாக்கியதால் தான் ராஜசேகர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் காவல்துறை தரப்பிலோ, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை வடக்கு மண்டல கூடுதல்   
ஆணையர் அன்பு பேசியதாவது,   ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.



Tags : Kodungayur ,Rajasekar ,CPCID , Kodungaiyur, trial, prisoner, Rajasekar, death
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு