கொல்கத்தா: சீனாவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கடைசி தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல்வேறு ஆசிய நாடுகளில் நடக்கின்றன. அதில் டி பிரிவுக்கான ஆட்டங்களில் இந்தியா உள்ளிட்ட அணிகள் கொல்கத்தாவில் விளையாடி வருகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது.
அந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மட்டுமின்றி 85வது நிமிடம் வரை எந்த அணியும் கோலடிக்கவில்லை. இந்தியாவின் பல வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால்தான் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை தக்க வைக்கும் நிலையில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. ஆனால் ஆட்டத்தின் 86நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய கேப்டன் சுனில் சேட்ரி அழகாக கோலாக்கினார். அதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. அடுத்த 2 நிமிடங்களில் ஆப்கான் வீரர் சோகிப் அமிரி பதில் கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
அதற்கடுத்த 2நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வர விடுப்பட்ட நேரத்திற்கான கூடுதல்நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இந்திய வீரர் அப்துல் சமத் அதிரடியாக கோலடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய தக்க வைத்தது. ஆனால் ஆப்கான் அந்த வாய்ப்பை இழந்தது. எஞ்சிய ஆட்டத்தில் கம்போடியாவை வென்றாலும் அந்த அணிக்கு பலன் கிடையாது.
அந்த எரிச்சலில் இந்திய வீரர்கள் மீது வேண்டுமென்றே மோதி கீழே தள்ளி விட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்களும் பதிலடியில் இறங்கினர். அதனை தடுக்க முயன்ற இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் மீது ஆப்கான் வீரர்களும், அந்த அணியின் ஊழியர்களும் தாக்குதல் நடத்தினர். அதனால் இந்திய வீரர்கள் ஆப்கான் வீரர்களை சுற்றி வளைத்தனர். அதனால் விளையாட்டு களமே போர்க்களம போல் மாறும் சூழல் ஏற்பட்டது. அதற்குள் நடுவர்கள் ஓடி வந்து வீரர்களை அமைதிப் படுத்தினர். கூடவே அரங்கில் இருந்த இந்திய ரசிகர்கள் களத்தில் இறங்காமல் இருக்க மேற்கு வங்க போலீசார் சமார்த்தியமாக தடுத்தனர். அதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.