காளையார்கோவில்: காரையார்கோவிலில் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் அறங்காவலர் மேதகு ராணி சிகிபா கவுரி வல்லப டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்குட்பட்ட சவுந்தரநாயகி அம்பாள், சமேத சோமேஸ்வரர் சாமி கோயில் உள்ளது.
இங்கு கடந்த ஜூன் 3ம் தேதி வைகாசி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 9ம் நாள் திருவிழாவான நேற்று காலையில் சவுந்தரநாயகி அம்பாள், சமேத சோமேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சோமேஸ்வரர், சவுந்தரநாயகி அம்பாள் இரண்டு தேர்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.இதில் சவுந்தரநாயகி அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுத்து வந்தனர். இதில் ஏஎல்ஏஆர் அறக்கட்டளை நிர்வாகிகள், அரணமனை சிறுவயல் ஜமீன்தாரர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கானப்பேர் அன்பர்கள் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை ஸ்தானிகம் சிவ காளீஸ்வர குருக்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ செய்திருந்தனர்.இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறும்.