×

ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய மம்தா அழைப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.! சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள  நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை  முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 24ம் தேதியுடன்  முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் 15வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்  ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகளை ஜூலை 21ம் தேதி தலைமைத்  தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த தேர்தலில் 776 எம்பிக்கள், 4,033  எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர். இவர்களுக்கு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206  மதிப்பிலான வாக்குகள் உள்ளன.

இதில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்கு  பெறுபவர் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்படுவார். இந்த தேர்தலில்  வெற்றிபெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5 லட்சத்து 26  ஆயிரத்து 420 மதிப்பிலான வாக்குகள் கைவசம் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.  மேற்கண்ட இரு அணியையும் சேராத மாநிலக் கட்சிகளிடம் 2 லட்சத்து 92 ஆயிரத்து  194 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு குறைந்த  மதிப்பிலான வாக்குகளே தேவை என்பதால், சில மாநிலக் கட்சிகளின் ஆதரவை  பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் பெறும்பட்சத்தில், அவர் எளிதாக வெற்றி  பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திரிணாமுல்  காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக  தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சி  தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த  கடிதத்தில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு வரும் 15ம் தேதி  டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்த கடிதம் மூலம் அழைப்பு  விடுக்கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய அனைவரும்  ஒத்துழைப்பு தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தில்  பங்கேற்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கும் மம்தா அழைப்பு  விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்திருக்கும்  வேளையில் மம்தா பானர்ஜியின் ஒருங்கிணைக்கும் இந்த நடவடிக்கை அரசியல்  வட்டாரத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கிடையே ஜனாதிபதி  தேர்தல் குறித்து  காங்கிரஸ் தலைவர் கட்சி தலைவர்களான  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா  பானர்ஜி போன்ற தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு  குறித்து எதிர்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.  அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக்  கொண்டுள்ளார். எனவே, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஆலோசனைகளை நடத்த  மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நியமித்துள்ளார். அவர்  அடுத்த வாரம் தமிழகம் வந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை  சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் குடியரசு தலைவர் வேட்பாளர்  தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

அதே  நேரத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிடம் 63 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வாக்குகள் இருக்கிறது. 133 எம்எல்ஏக்கள், 34 எம்பிக்கள் பலத்துடன்  இருக்கின்றனர். இதனால் யாரை வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்பதில் திமுகவின்  பங்கு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவரும்,  முதல்வருமான மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக இன்று காலை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர்  கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் தேர்தல்  தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிக்க வருகிற 15ம் தேதி டெல்லியில்  நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த  அழைப்பு தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் திமுக  தரப்பில் வலியுறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவும்,   எந்த வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு தருவது குறித்தும் கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.  அதே நேரத்தில் அடுத்த வாரம் டெல்லி  காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளது தொடர்பாகவும் கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடந்த இந்த  கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : Mamta ,Chief President ,Mueller K. Stalin ,Chennai ,Anna Navalayam , Mamata calls for presidential candidate; Chief Minister MK Stalin's main advice.! Participation of key executives in Anna Arivalayam, Chennai
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...