ஒடிசா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற உள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரில் பங்கேற்கமால் விலகிய நிலையில் ஐபிஎல்-லில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்-க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 211 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களை குவித்தார். இதையடுத்து கடின இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்கா அணி டேவிட் மில்லர் மற்றும் வான்டர் டசென் அதிரடியில் மிகவும் எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. ரசிகர்களிடையே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.