×

தனியார்மயம் இல்லையென கூறிவிட்டு கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் ரயில் இயக்குவதா?: வெங்கடேசன் எம்பி கண்டனம்

மதுரை: கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் ரயில் இயக்குவதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது:  ஜூன் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இதனை இயக்க உள்ளது. ரயில், தண்டவாளம், சிக்னல், நடைமேடை ரயில்வேக்கு சொந்தம். ரயில்வே டிரைவரே வண்டியை இயக்குவார். ஆனால் வருமானம் மட்டும் தனியாருக்கு.

கோவையிலிருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிமீ தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,280. ஆனால் அவர்கள் வசூலிப்பது ரூ.2,500. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360. தனியார் கட்டணம் ரூ.5,000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820. ஆனால் தனியார் கட்டணம் ரூ.7,000. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190. தனியார் கட்டணம் ரூ.10,000. அதாவது ஸ்லீப்பர் கட்டணம் ரெண்டு மடங்கு.  குளிர்சாதன படுக்கை மூன்றடுக்கு இரண்டடுக்கு ஆகியவை ஒன்றரை மடங்கு. முதல் வகுப்பு ஒண்ணேகால்  மடங்கிற்கு கட்டணக் கொள்ளை.

 தனியாருக்கு உரிமைக் கட்டணம் முன்பு ரூ.40 லட்சம் என்று தீர்மானித்து, பின்னர் அதிலும் ரூ.11 லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா? ரயில்வே அமைச்சர் சமீபத்தில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அடித்துச் சொன்னார். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.

 தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும். சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் சீரடி ரயில். இவர்களுக்கு ஆன்மிக பக்தியுமல்ல. தேச பக்தியுமல்ல. தனியார் பக்தி மட்டும்தான். கோவை- சீரடி ரயிலை ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,Siradi ,Venkatesh , Privatization, Coimbatore - Siradi, Private Rail, Venkatesh MP
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...