×

கோடை விடுமுறை முடியும் நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: மாணவர் சேர்க்கை பணி தீவிரம்

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்  மாணவர்களை சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர, தனியார் சுயநிதிப் பள்ளிகள்  சுமார் 12 ஆயிரம் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

இவற்றில் சுமார் 1 கோடியே 20  லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.  கீழ் வகுப்புகுளை பொருத்தவரையில் ஏப்ரல், மே  மாதத்தில்தேர்வுகள்  நடந்தாலும் மே மாதம் இறுதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, வரும் 13ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகளின் வளாகங்கள் அனைத்தும் தூய்மைப் பணி செய்யப்பட்டும்,

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்து இருந்தார். அதன்படி  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பேரணி நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

தனியார் பள்ளிகள் கட்டண பிரச்னை காரணமாக அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் வருகின்றனர். உடனடியாக அந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டும் வருகின்றனர். இந்த சூழலில் தான் நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.  இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் 13ம் தேதி பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : Schools reopen tomorrow after summer vacation: Student enrollment intensifies
× RELATED பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன்...