சென்னை: நயன்தாராவை முதல் முதலில் சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்த விக்னேஷ் சிவன், தங்களது திரைப் பயணத்திற்கு அனைவரது ஆதரவும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், 9ம் தேதி மாமல்லபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த அடுத்த நாளே, திருப்பதி திருமலை சென்ற தம்பதி சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் சென்னை தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் ஊடகங்களை சந்தித்த நயன்- விக்கி தம்பதி நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய நயன்தாரா, தம்பதியாக திரை உலகில் பயணிக்க போகும் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த ஊடக சந்திப்பு நடைபெறும் சொகுசு விடுதியில் தான் முதன்முதலில் நயன்தாராவை சந்தித்து கதை கூறியதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இனியும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் பல படைப்புகளில் கவனம் செலுத்தி வரும் சூழலுக்கு இடையே திருமணம் நடந்து முடிந்துள்ளது.