கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவிலில் நடந்த தேரோட்ட திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரகோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து துவக்கி வைப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். அதில் மாற்று சிந்தனையாளர்களை வைத்து தேரோட்டத்தை நடத்த கூடாது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இன்று திருவிழாவுக்கு வந்திருந்த அமைச்சருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.