சீர்காழி : சீர்காழி அருகே ஆறு தூர்வாரும்போது 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பனமங்கலம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அப்போது கரையை பலப்படுத்த அருகிலிருந்த கருவேலங்காட்டை அகற்றி மண் தோண்டியபோது பழமையான கலைநயமான கட்டிட வேலைப்பாடுடன் கோயில் இருப்பதும், பழமையான கோயிலில் புதுமையான சிவலிங்கம் இருப்பதும் தெரிய வந்தது.
பழமையான கோயில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்து கோயிலை வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். இந்த கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாக இருக்கலாம் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும், தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் என தெரிய வந்தது.
இந்த கோயிலை, தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் வந்து பார்வையிட்டார். புதிய கோயில் கட்ட பாலாலயம் செய்வதாக பக்தர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோயிலில் இருந்த சிவலிங்கத்திற்கு அப்பகுதி மக்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.