நெல்லை : நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 511 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர். தமிழகம் முழுவதும் பள்ளிகள் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளி வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெல்லை கவின்ராஜ், வள்ளியூர் செண்பவல்லி, அம்பை கனகவள்ளி மற்றும் அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.
பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது. கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண்கள், பள்ளி வாகனங்களின் நிறம் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவசர வழி இல்லாமல் இருந்த பள்ளி வாகனங்களில் உடனடியாக அதை சரி செய்து கொண்டு வர கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியும் பரிசோதிக்கப்பட்டது.
பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலைமையில் பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துவது குறித்து வாகன ஓட்டுனர்கள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு கருவியை டிரைவர்கள் பயன்படுத்துவது, விபத்துகளின்போது மாணவர்களை மீட்பது, தீயணைப்பானை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விளக்கி கூறினர். நேற்று ஒரு நாளில் 135 பள்ளிகளைச் சேர்ந்த 511 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.